ஸ்டார்ட்அப் சவால்

டெல்லியில் டிஃப்கனெக்ட் 2.0’வின் போது, பாதுகாப்புத்துறையில் சிறந்து விளங்குவதற்கான புதுமை கண்டுபிடிப்புகள் ஐடெக்ஸ் – பிரைம் மற்றும் 6வது டிபன்ஸ் இந்தியா ஸ்டார்ட் அப் சவாலை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். பாதுகாப்புத் துறையில் எந்த காலகட்டத்திலும் வளர்ச்சி அடையக்கூடிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவும் விதமாக ரூ. 1.5 கோடி முதல் ரூ. 10 கோடி வரையிலான திட்டங்களுக்கு தேவையான ஆதரவை வழங்கும் நோக்கில் ஐடெக்ஸ் – பிரைம்  நடத்தப்படுகிறது. 38 அம்சங்களைக் கொண்ட பாதுகாப்புத்துறை சார்ந்த இந்த ஸ்டார்ட்அப் சவாலில், செயற்கை நுண்ணறிவு, அதிநவீன இமேஜிங், சென்சார் சாதனங்கள், பெரிய அளவிலான தரவு பகுப்பாய்வு மற்றும் சுதந்திரமாக இயங்கக்கூடிய ஆளில்லா சாதனங்கள், தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 2021ம் ஆண்டுக்கான பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்கான பிரதமரின் விருதைப் பெற்ற பாதுகாப்பு உற்பத்தித் துறைக்கு ராஜ்நாத் சிங் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். டிஃப்கனெக்ட் 2.0, நாட்டின் தொழில்நுட்ப வல்லமை அதிகரித்து வருவதன் அடையாளமாகவும், பாரத பாதுகாப்புத்துறையில் ஸ்டார்ட்அப் முறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதை கொண்டாடும் விதமாகவும் நடத்தப்படுகிறது.