ஸ்டாண்ட் அப் இந்தியா ஒரு மைல்கல்

பொருளாதார ரீதியில் அதிகாரமளித்தல் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதை கவனத்தில் கொண்டு தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் ஏப்ரல் 5, 2016 தொடங்கப்பட்டது. பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தினர் மற்றும் மகளிர் தொழில்முனைவோர் சந்திக்கும் பல்வேறு சவால்களை கருத்தில் கொண்டு அவர்களுடைய கனவுகளை நனவாக்கும் வகையில் உற்பத்தி, சேவைகள் அல்லது வர்த்தகத் துறைகள் மற்றும் வேளாண் சார்ந்த நடவடிக்கைகளில் ஊக்குவிக்கும் வகையில் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் 7-ம் ஆண்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “1.8 லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர் மற்றும் பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தை சேர்ந்த தொழில்முனைவோருக்கு ரூ. 40,600 கோடிக்கும் அதிகமாக கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது எனக்கு பெருமையும், திருப்தியும் அளிக்கிறது. இந்த பிரிவை சேர்ந்த தொழில் முனைவோரை ஊக்குவிப்பதில் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் ஒரு முக்கிய மைல்கல் என்பதை நிரூபித்துள்ளது. ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம், சேவை கிடைக்கப்பெறாத, பின்தங்கிய தொழில்முனைவோருக்கு உகந்த வகையில், கடன் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் பல்வேறு தரப்பினரை சென்றடைந்துள்ளது. இந்தத் திட்டம் ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு அவர்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான ஆதரவை வழங்கியுள்ளது” என்று பெருமிதம் தெரிவித்தார். இதில் பேசிய, மத்திய நிதி இணையமைச்சர் டாக்டர் பகவத் கிசன்ராவ் காரத், “நிதி சேர்க்கைக்கான தேசிய இயக்கத்தின் 3வது தூணாக ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் விளங்குவதோடு, ‘நிதியற்றவர்களுக்கு நிதியளிப்பு’ வழங்கும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது. இப்பிரிவு தொழில் முனைவோர்களுக்கு வணிக வங்கிகளின் கிளைகளில் இருந்து தடையற்ற கடன் கிடைப்பதை உறுதி செய்துள்ளது. தொழில்முனைவோர், அவர்களது தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது” என கூறினார்.