ஸ்டாலினின் வெளிநாடு இன்ப சுற்றுலா

‘தொழில் துறைக்கு முதலீடுகளை ஈர்த்தல்’ என்ற பெயரில் மீண்டும் இன்பச் சுற்றுலா மேற்கொள்ளும் தி.மு.க அரசின் முதல்வருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் பழனிசாமி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளை அளித்து, பின் வாசல் வழியாக ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, கடந்த 2 ஆண்டுகளில், பொதுமக்களுக்கு பணப்பலன் அளிக்கக்கூடிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், புதிய திட்டங்களையும் தொடங்காமல், “கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்” செய்வதிலேயே முதல்வரின் மொத்தக் குடும்பமும் மும்முரமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பழனிவேல் தியாகராஜன், குறுகிய காலத்தில், முதல்வரின் மகனும் மருமகனும் அடித்த 30,000 கோடியை எங்கு பதுக்குவது என்று தெரியாமல் தவிப்பதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது இந்த ஆட்சியின் ஊழலை பறை சாற்றுகிறது. தொழில் முதலீடுகளை ஈர்க்கச் செல்வதாக கூறி, தன் குடும்பத்துடன் தனி விமானத்தில் துபாய்க்கு இன்பச் சுற்றுலா சென்றார் முதல்வர் ஸ்டாலின். ஒரு சில நிறுவனங்களுடன் தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டதாக அறிவித்தார். 6,000 கோடி முதலீடுகள் வரும் என்று வாயால் வடை சுட்டார். ஆனால், இது நடந்து முடிந்து 700 நாட்கள் கடந்துவிட்டன. இதுவரை எந்த முதலீடும் வந்ததாகத் தெரியவில்லை. இவர்கள் தங்கள் குடும்பத்தின் ஊழல் பணத்தை முதலீடு செய்யச் சென்றார்கள் என்று மக்களிடையே எழுந்த புகார் குறித்து இதுவரை முதல்வர் விளக்கம் அளிக்கவில்லை. தொழில் சுற்றுலா என்று முதல்வருடைய மகன், மருமகன் ஆகியோர் தமிழக மக்களைப் பற்றி கவலையில்லாமல் மாறி மாறி லண்டன் மற்றும் வெளிநாடுகளுக்குப் பறந்து செல்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே குடும்பத்துடன் துபாய் இன்பச் சுற்றுலாவை மேற்கொண்ட முதல்வர் இப்போது, சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு தொழில் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் சுற்றுலா மேற்கொண்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா அல்லது முதலீடு செய்யப் போகிறாரா? என்று தமிழக மக்களும் சமூக ஊடகங்களும் கேள்வி எழுப்பியுள்ளன” என கூறியுள்ளார்.