திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழகத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்றவுடன் எனக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. கடந்த ஓராண்டாக ஒவ்வொரு திருக்குறளின் முழுமையான அர்த்தத்தைப் புரிந்து வாசித்து வருகிறேன். திருக்குறளின் மொழிபெயர்ப்பு நூல்கள் 12க்கும் மேற்பட்டவை என்னிடம் உள்ளன. திருக்குறளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் பெரிய அர்த்தங்கள் உள்ளன. கோவையில் திருக்குறள் மாநாட்டை முதல் முறையாக துவங்கி வைத்தேன். தற்போது இரண்டாவது முறையாக சென்னையில் துவங்கி வைக்கிறேன். திருக்குறள் நூலை பலர் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். இதனால் திருக்குறள் அர்த்தங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட புதக்கங்களை நான் படித்துள்ளேன். ஆனால் திருக்குறளின் உண்மை நிலையை அந்த புத்தகங்கள் பேசவில்லை. திருக்குறள் புத்தகத்தை முழுமையாக மொழிபெயர்க்க வேண்டும்.

திருக்குறள், பக்தியுடன் துவங்கி, ஐந்து புலன்களை எப்படி கட்டுப்படுத்துவது, அதன் மூலம் எப்படி ஒருவன் தன் வாழ்நாளில் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ வேண்டும் என்பது குறித்துப் பேசுகிறது. ஆனால், வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டுமே திருக்குறள் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பார்க்கப்பட்டு வருகிறது. திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் குறித்தோ பாரதத்தின் ஆணிவேர் ஆன்மிகம்தான் என்பது குறித்தோ யாரும் பேசுவதில்லை.

இந்தப் பிரச்சினை வெள்ளையர்கள் காலத்தில் துவங்கியது. குறிப்பாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப், வேண்டுமென்றே இதனை மாற்றி மொழி பெயர்த்துள்ளார். ஆதிபகவன் என்றால் முதன்மை கடவுள் என நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஜி.யு.போப் இதற்கான அர்த்தத்தை புரிந்து இருந்தாலும் PRIMAL DUTY என எழுதியுள்ளார். திருக்குறளை அரசியலுக்காக சிலர் பயன்படுத்துகின்றனர். ஆன்மிகம், நீதி சாஸ்திரம் குறித்து திருக்குறள் பேசுகிறது. ஆனால், அதனை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டும் காட்ட நினைக்கின்றனர். இந்த புதக்கதை முழுமையாக புரிந்து வாசிக்கும் அனைவருக்கும் இது தெரியும்.

பாரதம் வளர்ந்து கொண்டு்ள்ளது. வரும் 2047ல் பாரதம் உலக வல்லரசாக மாறும். வெறும் பொருளாதார அளவில் மட்டும் நாம் வளரக்கூடாது. ஆன்மிகமும் வளர வேண்டும். திருக்குறளுக்கு அதற்கான முழுமையான அங்கீகாரத்தை வழங்க வேண்டும். உண்மை ஒரு நாள் நிச்சயம் வெளி வந்தே தீரும். அதனை யாராலும் தடுக்க முடியாது” என கூறினார்.