சிவாச்சாரியார்கள் ஆர்ப்பாட்டம்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழக சிவாச்சாரியார் சமூக நலச்சங்கம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் சுரேஷ், ‘தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். ஆகம விதிகளை மீறாமல், பாரம்பரிய முறைப்படி கோயில்களில் பூஜைகள் நடைபெற வேண்டும். வேத ஆகமங்களை முறையாக படித்த சிவாச்சாரியார்களை பூஜை செய்ய பணியமர்த்த வேண்டும். ஹிந்து சமய அறநிலையத் துறை, ஆகமங்கள், பூஜைகளில் தலையிடக் கூடாது. எந்த மத வழிபாடுகளிலும் அரசு தலையிடக்கூடாது என்ற அரசியல் அமைப்பு சட்டத்தை தமிழக அரசு மதித்து நடக்க வேண்டும். கோயில்களில் பூஜை செய்வோருக்கு, அரசர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்தே வயது வரம்பு கிடையாது. அதனை தமிழக அரசு மீண்டும் உறுதி செய்ய வேண்டும்’ என்று கூறினார்.