சிமிக்கு அனுமதி இல்லை

பாரதத்தில் சட்டவிரோத பயங்கரவாத அமைப்பான சிமி இயக்கத்திற்கு உபா சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், மத்திய அரசின் இந்தத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தர். இதனை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதில் மத்திய அரசு வழக்கறிஞர், பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘நாட்டின் சட்டங்களுக்கு முரண்பட்ட விவகாரங்களில் சிமி அமைப்பு ஈடுபட்டுள்ளது. அந்த அமைப்பு, மாணவர்கள், இளைஞர்களை இஸ்லாமை ஊக்குவிக்கும் வகையிலும், ஜிஹாத்துக்கு ஆதரவு அளிக்கும்படியும் கோருகிறது. 2001ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து அந்த அமைப்பு தடை செய்யப்பட்டபோதும், பாரதத்தின் இறையாண்மை மற்றும் தேச ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய வகையில் ஒன்று கூடுதல், கூட்டம் போடுதல், சதிதிட்டங்கள் தீட்டுதல், ஆயுதம், வெடிபொருட்களை பெறுதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சிமி செயல்பாட்டாளர்கள், பிற நாடுகளில் உள்ள சிமி அமைப்பினரோடு தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். அவர்களது நடவடிக்கைகள் நாட்டின் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சிமி அமைப்பின் கருத்துக்கள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது. பாரதத்தில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவது என்ற அவர்களது கருத்தை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க முடியாது. மதசார்பற்ற நம்முடைய சமூகத்தில் அவர்கள் தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கக்கூடாது’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.