பொன்னூரில் கிடைத்த சிவலிங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள பொன்னூர் கிராமத்தில் நெற்களம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது, மண்ணில் சுமார் மூன்றரை அடி உயரமுள்ள சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் அதில் பீடம் எதுவும் கிடைக்கவில்லை. இத்தகவலை அடுத்து பொன்னூர் கிராம மக்கள் சிலையை வழிபட்டு சென்றனர். ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் இந்த தகவலை வந்தவாசி வட்டாட்சியருக்கு தெரிவித்தனர். அங்கு வந்த வட்டாட்சியர், திருவண்ணாமலை அரசு அருங்காட்சியகத்துக்கு சிலையை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சிலையை அருகே உள்ள சாந்தநாயகி உடனுறை திருக்காமேஸ்வரர் கோயில் அருகே வைத்து வழிபட ஏற்பாடு செய்துள்ளனர்.