பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லையோரமாக உள்ள ஊரி பகுதியில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி நடக்கிறது, துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிலிட்ட ஏராளமான ஆயுதங்களை குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பல, தேடுதல் நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர்.அவ்வகையில் ஊரி ஹத்லங்கா பகுதியில் ராணுவத்தினர் தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த, 8 ஏ.கே 74 ரக துப்பாக்கிகள், 24 ஏ.கே 74 துப்பாக்கி தோட்டா கொள்கலன்கள், 560 ஏ.கே 74 தோட்டாக்கள், 12 சீன கைத்துப்பாக்கிகள், 24 சீன கைத்துப்பாக்கி தோட்டா கொள்கலன்கள், 244 கைத்துப்பாக்கி தோட்டாக்கள், 9 சீன கையெறிகுண்டுகள், 5 பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கையெறிகுண்டுகள், ‘ஐ லவ் பாகிஸ்தான்’ என்று பொறிக்கப்பட்ட 81 பலூன்கள், பாகிஸ்தான் பெயருடன் 5 செயற்கை இழை சாக்குப்பைகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்களை கண்டுபிடித்து கைப்பற்றினர். ‘காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையும், அவர்களின் ஆயுத இருப்பும், பணமும் வெகுவாக குறைந்துள்ளது.எனவே பாரதப் பகுதிக்குள் ஊடுருவவும், ஆயுதங்களை கடத்தவும் பயங்கரவாதிகள் தீவிரமாக செயல்படுகின்றனர். ஆனால் பாதுகாப்பு படையினரின் தீவிர கண்காணிப்பு காரணமாக அவர்கள் ஆயுதங்களை அங்கேயே கைவிட்டு தங்கள் பகுதிக்கு திரும்பியிருக்கலாம்’ என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.