ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு சீல்

பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் ஊராட்சி, சிவசக்தி நகரில் திரிசூல நாதர் கோயில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்குச் சொந்தமாக, 61.4 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை ஆக்கிரமித்து 1,257 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் முறையாக வரி மற்றும் வாடகை செலுத்தாததால், இந்த இடத்தை கோயில் இடமாக அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதல்கட்டமாக 54 வீடுகளை காலி செய்து அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆக்கிரமிப்பாளர்களின் போராட்டம் காரணமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தள்ளிவைக்கப்பட்டது. முதல்கட்டமாக கடந்த ஜூன் மாதம், 3 கடை, 10 வீடுகளுக்கு காவல்துறை பாதுகாப்புடன் அதிகாரிகள் சீல் வைத்தனர். அதனைத் தொடர்ந்து 2வது கட்டமாக, அறநிலையத் துறை அதிகாரிகள் 13 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆக்கிரமிப்பாளர்கள் ஒன்று திரண்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 100க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். இதேபோல் 3வது கட்டமாகவும் மேலும் பல வீடுகளுக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.