சங்கடத்தில் சமாஜ்வாதி கட்சி

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும் ராம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆசம் கானுக்கு அவதூறு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சட்டமன்ற உறுப்பினட் பதவியில் இருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் காலியான ராம்பூர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 5ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், ஆசம் கானின் நம்பிக்கைக்குரியவரும் ஊடகப் பொறுப்பாளருமான ஃபசகத் அலி கான் என்கிற ஷானு தற்போது பா.ஜக.வில் இணைந்தார். ராம்பூர் தொகுதிக்கான சமாஜ்வாதி வேட்பாளராக அசிம் ராஜா அறிவிக்கப்பட்டதில் ஷானு அதிருப்தி அடைந்துள்ளார். முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைமை மதிப்பளிக்கவில்லை என குற்றம் சாட்டிய ஷானு, தனது ஆதரவாளர்களுடன் உத்தரப் பிரதேச பா.ஜ.க தலைவர் புபேந்திர சௌத்ரி முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார்.