ரப்பர் ஸ்டாம்ப் ராஷ்டிரபதி ?

பெங்களூருவில் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய யஷ்வந்த் சின்ஹா, “பா.ஜ.க தலைமையிலான அரசு அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை, வருமானவரித்துறை போன்ற அமைப்புகளை அதிகார துஷ்பிரயோகத்தால் தவறாக வழிநடத்திவருகிறது. தனது அரசியல் எதிரிகளை பழிவாங்குகிறது. ஜனதிபதியை ரப்பர் ஸ்டாம்ப்பாக மட்டுமே பயன்படுத்திவருகிறது” என பேசினார். இதற்கு பதில் அளித்துள்ள பா.ஜ.க தேசிய பொது செயலாளர் சி.டி ரவி, “நேர்மையாக இருப்பவர்களை அமலாக்கத்துறையோ அல்லது வருமானவரித் துறையோ எதுவும் செய்ய முடியாது. ஆனால் ஊழல் செய்பவர்கள், நிதிமோசடியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாது. நேர்மையானவர்கள் எதற்கும் கவலைப்பட தேவையில்லை. ஊழல் செய்தவர்கள் நிச்சயமாக கவலைப்படவேண்டும். பழங்குடியின சமூகத்திலிருந்து வந்த திரௌபதி முர்மு எனும் பெண் ஜார்கண்ட் ஆளுநராக அமைச்சராக ஒடிசாவில் சட்டமன்ற உறுப்பினராக ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் விரிவுரையாளராக தனது திறமையை நிரூபித்துள்ளார். அவரை குறித்து பேசிய யஷ்வந்த் சின்ஹாவின் கருத்து அவரது மோசமான மனநிலையையே வெளிக்காட்டுகிறது. பழங்குடியினப் பெண் அந்த பதவிக்கு தகுதியற்றவர் என்ற எண்ணம் அவரது மோசமான மனநிலையை சித்தரிக்கிறது. நிச்சயமாக நம் நாட்டிற்கு ரப்பர் ஸ்டம்ப் ராஷ்டிரபதி தேவையில்லை. ஆனால் ஏற்கனவே தனது திறமையை நிரூபித்துள்ள திரௌபதி முர்முவுக்கு எதிரான பொய்பிரச்சாரத்தில் ஈடுபடும் மனநிலை நமது நாட்டிற்கு ஆபத்தானது. திரௌபதி முர்மு ஜூலை 10 கர்நாடகாவில் வாக்கு சேகரிக்க உள்ளார். தற்போதைய எண்ணிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெறுவது உறுதி” என தெரிவித்துள்ளார்.