பின்வாங்கும் ஐ.எம்.ஏ

நவீன அலோபதி மருத்துவத்திற்கு எதிரான தனது கருத்துக்களை வாபஸ் பெற்றால், யோகா குரு பாபா ராம்தேவ் மீதான அனைத்து காவல்நிலையப் புகார்கள், அவதூறு வழக்குகளை வாபஸ் பெற ஐ.எம்.ஏ அமைப்பு தயாராக இருப்பதாக இந்திய மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் அறிவித்துள்ளார். முன்னதாக கிறிஸ்தவ மிஷனரிகளின் முன்னெடுப்பான ஐ.எம்.ஏ.வின் அச்சுறுத்தல்களுக்கு தலைவணங்காமல், யோகா குரு பாபா ராம்தேவ், அந்த அமைப்புக்கு எதிராக குரல் கொடுத்தார்.

மத்திய அமைச்சர் மற்றும் பலரால் அவர் தன் கருத்தை வாபஸ் பெற கோரப்பட்டார். அதனால் அவர் தன் கருத்தை வாபஸ் பெற்றார். அதன் பிறகும், 1,000 கோடி நஷ்டஈடு, மன்னிப்பு கேட்க வேண்டும் என ஐ.எம்.ஏ தொடர் சீண்டல்களில் ஈடுபட்டது. மேலும், யோகா குருவின் கருத்துக்கள் மத்திய அரசாங்கத்திற்கும் எதிரானது, மருத்துவர்களுக்கு எதிரானது என்று ஐ.எம்.ஏ தலைவர் அதனை திசைத் திருப்ப முயன்றார். யோகா குரு ஏற்கனவே தனது கருத்துக்களை தெளிவுபடுத்தியதுடன் பின்வாங்குவதற்கான மனநிலையில் இல்லை என்பதையும் தெளிவு படுத்தினார். இதைத்தவிர, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பக்கவிளைவுகள் இல்லா மருத்துவம், குறைந்த விலை மருத்துவம் குறித்து பாபா ராம்தேவ் கேட்ட, 25 கேள்விகளுக்கு இன்னமும் ஐ.எம்.ஏ பதில் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டாக்டர் ஜெயலால், எப்படி தனது பதவியை மதமாற்றம் செய்யத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற செய்திகள் வெளியாகின. இதனால் ஐ.எம்.ஏவின் எஃப்.சி.ஆர்.ஏ சான்றிதழை முடக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜெயலால் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஐ.எம்.ஏ, கோடிக்கணக்கான பணத்தைப் பெற்றுக்கொண்டு பல்வேறு தனியார் தயாரிப்புகளுக்கு எவ்வாறு பாக்டீரியா எதிர்ப்பு சான்றிதழ்களை வழங்குகின்றது என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால், தற்போது தனது அடித்தளமே ஆட்டம் காண ஆரம்பித்ததால், இறங்கிவர ஆரம்பித்துள்ளது ஐ.எம்.ஏ.