வீரர்களுக்கு மரியாதை

ஜனவரி 23ம் தேதி பராக்ரம் திவஸ் எனப்படும் பராக்கிரம தினத்தில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்குப் பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயரை சூட்டும் நிகழ்வில் பிரதமர் பங்கேற்கிறார். மேலும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள நேதாஜி தேசிய நினைவகத்தின் மாதிரியையும் பிரதமர் திறந்து வைக்கிறார். தேசத்தின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக உயிர்த்தியாகத்தைச் செய்த பரம் வீர் சக்ரா விருது பெற்ற நமது மாவீரர்களின் பெயர்களை தீவுகளுக்கு சூட்டுவது அவர்களுக்கு என்றென்றும் அஞ்சலி செலுத்துவதாக அமையும். முன்னதாக, அந்தமான் நிக்கோபார் தீவுகளின் வரலாற்று முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவை போற்றும் வகையில், 2018ம் ஆண்டு அந்த தீவுக்கு பிரதமர் சென்றபோது, ராஸ் தீவுகளுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நீல் தீவு மற்றும் ஹேவ்லாக் தீவு ஷாஹீத் தீவு மற்றும் ஸ்வராஜ் தீவு என மறுபெயரிடப்பட்டது. நிஜ வாழ்க்கை பராக்கிரமசாலிகளுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதில் பிரதமர் எப்போதுமே உறுதிப்பாட்டுடன் செயல்படுவார். இந்த உணர்வின் வெளிப்பாடாக, அங்குள்ள 21 பெரிய பெயரிடப்படாத தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 பேரின் பெயரைச் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.