சில மணி நேரங்களில் ராஜினாமா

காங்கிரஸின் பிரசாரக் குழுத் தலைவர் மற்றும் அகில இந்திய அரசியல் விவகாரக் குழுவில் உறுப்பினராக உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நியமனம் தனது மதிப்பிற்கு குறைவானதாக கருதியதாலும் தேசிய அரசியலில் ஈடுபட்டுள்ள தன்னை மீண்டும் மாநில அரசியலில் காங்கிரஸ் தலைமை இறக்கியது பிடிக்காததாலும் அவர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. அவருடன் இணைந்து ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சியின் மற்ற நிர்வாகிகள் சிலரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவருகின்றனர். இவர், காங்கிரஸின் தலைமையில் மாற்றம் தேவை நீண்ட காலமாகவே குரல் கொடுத்து வருகிறார். தற்போதைய குடும்பத் தலைமை மீது அதிருப்தியில் இருந்துவருகிறார். தலைமை மாற்றம் கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 அதிருப்தி தலைவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர்.