துணை பேராசிரியர் பணியிடை நீக்கம்

மதுரை மருத்துவக் கல்லூரி மயக்கயவியல் துறையின் துணை பேராசிரியரான தாஹீர் உசேன், இந்தத் துறையில் பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, விசாகா கமிட்டி அமைக்கப்பட்ட நிலையில், இக்கமிட்டியிடம் 23 மாணவிகள் எழுத்துப் பூர்வமான புகார் கடிதத்தை அளித்தனர். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தாஹீர் உசேன் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானது. இதன்படி, தாஹீர் உசேனை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி இயக்குநகரகம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக் கல்லூரியின் டீன் ரத்தினவேலு, “துணை பேராசிரியர் தாஹீர் உசைன் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக கடந்த 6ம் தேதி மயக்கவியல் துறையில் பயிலும் மாணவிகளிடமிருந்து புகார் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து, 8ம் தேதி எழுத்துப்பூர்வமான புகார் பெறப்பட்டது. எனது மேற்பார்வையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் தனலட்சுமி தலைமையிலான 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில், 18 மாணவிகள், ஒரு செவிலியர், 2 பேராசிரியர்களிடம் எழுத்து வழியாக புகார் அளித்தனர். விசாரணையில், துணை பேராசிரியர் தாஹீர் உசேன் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதன் அறிக்கை மருத்துவக் கல்லூரி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தாஹீர் உசேன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது போன்ற புகார்கள் மீது உடனடியாக மருத்துவக் கல்லூரி நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்தார்.