மசோதா திருப்பி அனுப்பிய காரணம்?

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கோவை அவிநாசி சாலையில் உள்ள ‘சிட்ரா’ கலையரங்கில் நடந்த மகளிர் தின விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பெண்கள் அனைத்து துறைகளிலும் பிரகாசிக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன். யாரும் போகாத பாதையில் பா.ஜ.க தொண்டன் சென்று கொண்டிருக்கிறான். எங்கள் கட்சியை அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட பிற கட்சிகளுடன் இணைத்துப் பேச வேண்டாம். பா.ஜ.கவை ஆட்சிக்கு கொண்டுவரும் நோக்கத்தில் நாங்கள் அனைவரும் களப்பணியாற்றி வருகிறோம். யாருக்கும் சாமரம் வீசுவதில்லை என்பது தான் பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணியின் தனித்துவம். ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும் என்பதே பா.ஜ.கவின் நிலைப்பாடு. இதை ஆளுநரிடம் நாங்கள் தெரிவித்துள்ளோம். இந்த சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளதற்கான காரணத்தை முதலில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். தவறான சட்டம் என்பதாலேயே ஆளுநர் அதனை திருப்பி அனுப்பினார். தமிழக அரசு அதில் உரிய திருத்தங்கள் செய்யாவிட்டால், நீதிமன்றத்தில் அதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு தெரிவித்துள்ள காரணத்தை பேரவை தலைவர் மக்களிடம் தெரிவிக்க வேண்டும். ஊழல் செய்தால் அமலாக்கத் துறையினர் நடவடிக்கை எடுப்பது இயல்பு. காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியோ ஆம் ஆத்மி ஊழல் கட்சி என்கிறார். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆம்ஆத்மி கட்சியினர் மீது எடுத்துள்ள நடவடிக்கை தவறானது என்கிறார். அவர்களது கூட்டணி கட்சிக்குள் இத்தனை முரண்பாடுகள் உள்ளன. முதலில் இதுகுறித்து அவர்கள் பேசி ஒரு மித்த முடிவை எடுக்கட்டும்” என கூறினார்.