ரஜினிகாந்த் ஆளுநர் சந்திப்பு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவியை நடிகர் ரஜினிகாந்த் நேற்று நேரில் சந்தித்து பேசினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “ஆளுநருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. தமிழகத்திற்கு நல்லது செய்ய எதுவேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளேன் என அவர் கூறினார். காஷ்மீரில் பிறந்து, அதிக காலம் வட பாரதத்தில் வளர்ந்தவர் ஆளுநர். தற்போது தமிழகத்தில் இருக்கும் ஆன்மிக உணர்வு அவரை வெகுவாகக் கவர்ந்துள்ளது. தமிழர்களின் கடின உழைப்பு, நேர்மை போன்றவை மிகவும் பிடித்திருப்பதாக கூறினார். ஆளுநருடன் 30 நிமிடம் பேசிக் கொண்டிருந்தேன். அரசியல் குறித்தும் விவாதித்தோம்; ஆனால் அதை உங்களிடம் தற்போது சொல்ல முடியாது. நாம் மீண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை” என்று கூறினார். ரஜினிகாந்துடனான சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஆளுநர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.