ராகுலின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு உரியவை

லண்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, “பாரத ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடைபெறுகிறது. ஆனால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலகின் ஜனநாயக நாடுகள் இதைக் கண்டுகொள்ளத் தவறிவிட்டன” என கூறினார். இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே உள்ளூர் பிரச்சினைகள் குறித்து ஐ.நா சபையில் புகார் செய்துள்ளது. இப்போது பாரதத்தின் உள் விவகாரங்களில் தலையிடுமாறு பிற நாடுகளுக்கு கோரிக்கை வைக்கிறது. அடிமை மனப்பான்மையிலிருந்து அக்கட்சி இன்னும் விடுபடவில்லை. ராகுல், தனது கட்சியின் தோல்விகளை மறைப்பதற்காக, வெளிநாட்டு மண்ணில் தேசத்தின் புகழை கெடுக்க முயற்சிக்கிறார். இதற்காக வெளிநாட்டு அமைப்புகள், வெளிநாட்டு தொலைக்காட்சி சேனல்கள் என கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்கிறார். ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள ராகுல் காந்தி, அரசியல் சாசன அமைப்புகள் மீது நம்பிக்கையை இழந்துள்ளார். எனவேதான் அவரது செயல்பாடுகள் அப்படி உள்ளன. தேசத்தை காட்டிக் கொடுக்காதீர்கள் ராகுல். உங்கள் பொய்களை யாரும் நம்ப மாட்டார்கள். ராகுலின் மொழி, எண்ணங்கள், செயல்பாடு ஆகிய அனைத்துமே சந்தேகத்துக்குரியவை. இது போல அவர் நடந்துகொள்வது முதல் முறையல்ல. பாரதம் தயாரித்த கொரோனா தடுப்பூசி குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். எல்லையில் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தை நமது ராணுவம் முறியடித்தது குறித்தும் அவர் சந்தேகத்தை எழுப்பினார். ஆனால் அவர் சீன அதிகாரிகளை ரகசியமாக சந்தித்துப் பேசுகிறார். காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருக்கலாம். ஆனால் பாரதம் பலவீனமாக இல்லை. நமது நாட்டின் ஜனநாயகம், மக்கள், ராணுவம் ஆகிய அனைத்துமே வலிமையாக உள்ளது. பாரதத்தின் தலைவரான மோடியும் வலிமையாக உள்ளார். உலக தலைவர்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்” என கூறினார்.