ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்

மாபெரும் சுதந்திர போராட்ட வீரரான வீர் சாவர்க்கர், அந்தமான் சிறையில் இருந்தபோது ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து கூறி வந்தார். அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், “மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, என்னுடைய பெயர் காந்தி” என்று கூறினார். இதற்கு பா.ஜ.ஜ, சிவசேனா உள்ளிட்ட கட்சியினரும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மகாராஷ்டிராவில், பா.ஜ.கவும், அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியும் இணைந்து மாநிலமெங்கும் பயணித்து சாவர்க்கரின் சுதந்திர போராட்டத்தின் வீர வரலாறு, அவர் செய்த பல்வேறு தேச சேவைப் பணிகள் பற்றிய உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, ‘சாவர்க்கர் கௌரவ யாத்திரை’யை தொடங்கியது. நாக்பூரில் நடந்த இந்த யாத்திரையில் கலந்துகொண்டு பேசிய மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சில தவறான புரிதல் காரணமாக வீர் சாவர்க்கரை பற்றி விமர்சித்துள்ளார். சாவர்க்கரை அவமதிக்க அவருக்கு உரிமை கொடுத்தது யார்?. அவ்வாறு அவமதிப்பதை யாரும் சகித்து கொள்ள மாட்டார்கள். சாவர்க்கர் பற்றிய பேச்சுக்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” என கூறினார்.