புதுச்சேரி | 6 முதல் 12 வரை அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம்: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச்-சில் முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள்: ”புதுச்சேரியி்ல் 2023-24ம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீடு ரூ. 11,600 கோடி என நிர்ணியிக்கப்பட்டுள்ளது. சொந்த வருவாய் வரவினங்கள் ரூ.6154 கோடியாகவும், மத்திய அரசு நிதியுதவி ரூ. 3177 கோடியாகவும், மத்திய அரசு திட்டங்களின் கீழ் தரப்படும் நிதி ரூ. 620 கோடியாகவும் உள்ளது. நிதி பற்றாக்குறையை ஈடுசெய்ய மத்திய அரசு அனுமதியுடன் வெளிச் சந்தை கடன் ரூ.1707 கோடியாகும். நடப்பாண்டில் மகளிருக்கு சிறப்பு நிதியத்துக்கு ரூ. 1332 கோடியும், பசுமை சிறப்பு நிதியத்துக்கு ரூ. 555 கோடியும், இளையோருக்கான சிறப்பு நிதியத்துக்கு ரூ 504 கோடியும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்பு நிதியங்களுக்கு ரூ. 2391 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசின் நிதி ஒதுக்கீட்டில் பெரும்பகுதி சம்பளம், ஓய்வூதியம், கடன் மற்றும் வட்டியைச் செலுத்துதல் ஆகிய செலவினங்களுக்காகச் செலவிடப்படுகிறது. பால் உற்பத்தியைப் பெருக்க உயர் ரக கலப்பின கறவை பசு 50 விழுக்காடு மானியத்தில் தரப்படும். ஒரு கறவை பசு வைத்திருப்போருக்கு 50 விழுக்காடு மானியத்தில் இரண்டு கலப்பின கறவைப்பசுக்கள் தரப்படும். 3 கறவைப்பசு வைத்திருந்தால் மேலும் 2 பசுக்கள் 40 சத மானியத்தில் தரப்படும். நவீன பால் கறவை இயந்திரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக தரப்படும். பாரதியார் நினைவு அருங்காட்சியகம், பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம், மகாகவி பாரதியார் நினைவு மண்டபம், கீழூர் நினைவுச்சின்னம், மக்கள் தலைவர் சுப்பையா நினைவகம் ஆகியவற்றில் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் துவங்கப்படும்.  புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கோயில் திருவுருவச்சிலைகள், தங்கம், வெள்ளி ஆபரணங்கள், இதர அசையும் சொத்துகள் உட்பட அனைத்து ஆவணங்களும் டிஜிட்டலாக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு இணையத்தில் பதிவேற்றப்படும். அசையா சொத்துகள் விவரம் சேகரிக்கப்பட்டு கோயில் நிலம், வீடு, வணிக வளாகம் ஆகியவற்றில் பெறப்படும் வாடகை உயர்த்தப்படும். நடப்பாண்டு திருக் காஞ்சியில் ரூ.1.66 கோடியில் மகா புஷ்கரணி விழா நடைபெறும்.” இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.