அரியலூரில் இன்று ஆர்பாட்டம்

அரியலூர் விவசாயி செம்புலிங்கம் மரணத்துக்கு காரணமான காவல்துறையினரின் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும், விவசாயி செம்புலிங்கம் மரணத்துக்கு நீதி கேட்டும், தி.மு.க அரசை கண்டித்தும் இன்று தமிழக பா.ஜ.க சார்பில், அரியலூர் மாவட்டத்தில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தொடரும் தமிழக காவல்துறையின் அடக்குமுறை.காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலால் அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டையைச் சேர்ந்த விவசாயியும் தமிழக பா.ஜ.க தொண்டருமான அண்ணன் செம்புலிங்கம் அவர்கள் உயிரிழந்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயிரிழந்த அண்ணன் செம்புலிங்கம் அவர்களின் மகன் மணிகண்டன் அவர்களை இன்று திருச்சியில், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், அரியலூர் மாவட்ட தலைவர் ஐயப்பன் ஆகியோருடன் சந்தித்து ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொண்டோம். உயிரிழந்த செம்புலிங்கம் அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம். மணிகண்டனை காசாங்கோட்டையில் உள்ள அவர்களது இல்லத்திற்கு வந்து அவரது தாயாரை சந்திப்பேன் என்று உறுதி அளித்துள்ளேன். இந்த குற்றச் சம்பவத்திற்கு காரணமான காவல்துறையினரின் மேல் அறிவாலயம் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.