புராஜெக்ட் சீட்டா

புராஜெக்ட் சீட்டா திட்டத்தின்படி, தென்னாப்பிரிக்காவில் இருந்து செப்டம்பர் 2022 மற்றும் பிப்ரவரி 2023ல் இருபது சிறுத்தைகள் வெற்றிகரமாக குனோ தேசிய பூங்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டன. இந்த சூழலில், சமீபத்தில் தேசிய புலி பாதுகாப்பு ஆணையத்தின் (என்.டி.சி.ஏ) வழிகாட்டுதலின்படி, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வனவிலங்கு நிபுணர் அட்ரியன் டோர்டிஃப், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த புலிகள் அதிகரிப்புத் திட்ட மேலாளர் வின்சென்ட் வான் டான் மெர்வே, டேராடூனில் உள்ள பாரதத்தின் வனவிலங்கு நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி கமர் குரேஷி, டெல்லியிலுள்ள தேசிய புலி பாதுகாப்பு ஆணைய ஆய்வாளார் ஜெனரல் அமிட் மல்லிக் உள்ளிட்ட நிபுணர்கள் அடங்கிய குழு, குனோ தேசிய பூங்காவில் புராஜெக்ட் சீட்டா திட்டத்தின் தற்போதைய நிலையை மதிப்பாய்வு செய்து திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது.

சிறுத்தைகளின் செயல்பாடுகள்: குனோ தேசியப் பூங்காவில் வேலிகள் அமைக்கப்படாததால், விலங்குகள் விரும்பியபடி பூங்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல சுதந்திரமாகச் செல்கின்றன. இந்தப் சிறுத்தைகளில் இரண்டு ஆண் சிறுத்தைகள் (கௌரவ் மற்றும் ஷவுரியா) பூங்காவிற்குளேயே தங்கியுள்ளன. இவை பூங்காவின் எல்லைகளுக்கு அப்பால் நிலப்பரப்புக்கு செல்வதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. ஆஷா என்ற பெண் சிறுத்தை, பூங்காவின் கிழக்கே சென்றாலும், பூங்காவின் பகுதிக்குள்ளேயே சுற்றி வருகிறது. இவை மனித ஆதிக்கமுள்ள பகுதிகளுக்குள் நுழையவில்லை. மற்றொரு ஆண் சிறுத்தையான பவன், இரண்டு முறை பூங்காவின் எல்லைகளுக்கு அப்பாலுள்ள பகுதிகளுக்குச் செல்ல முயன்றது. தனது இரண்டாவது பயணத்தின்போது, அது அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குச் சென்று அங்குள்ள கால்நடைகளால் விரட்டப்பட்டது. அனைத்து சிறுத்தைகளும் செயற்கைக்கோள் காலர்கள் பொருத்தப்பட்டு கண்கணிக்கப்படுகின்றன. இந்த சிறுத்தைகளை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இரண்டு சிறுத்தைகள் இறந்தது குறித்த தகவல்கள்: நமீபியாவைச் சேர்ந்த ஆறு வயது பெண் சிறுத்தை சாஷா ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் நோய்வாய்ப்பட்டது. அதனைப் பரிசோதனை செய்ததில் அதற்கு நாள்பட்ட சிறுநீரகக் கோளாறு இருப்பது தெரிய வந்தது. கால்நடை மருத்துவகளால் சிகிச்சை அளிக்கப்பட்டும் மார்ச் மாதம் சாஷா உயிரிழந்தது. இந்நோயின் அறிகுறிகள் வெளிப்படுவதற்கு பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் ஆகும். இதனால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடிவதில்லை. இந்த நோய், பரவாத நோய் என்பதால், வேறு எந்த சிறுத்தைகளுக்கும் ஆபத்தும் இல்லை. தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு வயதான உதய் என்ற ஆண் சிறுத்தை, கடந்த ஏப்ரல் 23ம் தேதி தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு கடுமையான நரம்புத்தசை கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. பின் திடீரென அப்புலி மயங்கி விழுந்து உயிரிழந்தது. பிரேதப் பரிசோதனையில், இதயம் மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அப்புலி உயிரிழந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, மற்ற சிறுத்தைகள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் எதற்கும் இதேபோன்ற அறிகுறிகள் தென்படவில்லை. அவை அனைத்தும் முற்றிலும் ஆரோக்கியமாகக் காணப்படுகின்றன என கூறப்பட்டுள்ளது.