தனது பயணம் குறித்து பிரதமர்

ஜப்பான் பிரதமர் ஃபியூமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் அந்நாட்டின் தலைமையில் நடைபெற உள்ள ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும் பப்புவா நியூ கினியாவில் பாரத பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் மூன்றாவது உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகவும் ஆஸ்திரேலியா பிரதமர் அல்பனீசின் அழைப்பின் பேரில் பாரத ஆஸ்திரேலிய இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவும் ஆஸ்திரேலிய நாட்டின் தொழில்துறை தலைவர்களுடன் கலந்துரையாடி பாரதத்தில் முதலீடுகளை திரட்டவும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாரத சமூகத்தினருடனும் கலந்துரையாடவும் பிரதமர் மோடி நேற்று மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “ஜப்பான் பிரதமர் ஃபியூமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் அந்நாட்டின் தலைமையில் நடைபெற உள்ள ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக செல்கிறேன். அண்மையில் பாரதத்தில் நடைபெற்ற பாரத ஜப்பான் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கு வந்திருந்த பிரதமர் கிஷிடாவை மீண்டும் ஒரு முறை சந்திக்கவிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டு ஜி20 அமைப்பிற்கு பாரதம் தலைமைத்துவம் ஏற்றுள்ள வேளையில், ஜி7 உச்சிமாநாட்டில் நமது பங்கேற்பு முக்கியத்துவம் வாய்ந்தது. உலகம் சந்தித்து வரும் சவால்களை இணைந்து எதிர்கொள்வதன் அவசியம் குறித்து ஜி7 நாடுகள் மற்றும் இதர அழைப்பு நாடுகளுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதில் ஆவலாக இருக்கிறேன். ஹிரோஷிமா ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கும் ஒரு சில தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவிருக்கிறேன்.

ஜப்பானிலிருந்து பப்புவா நியூ கினியாவில் உள்ள போர்ட் மோரெஸ்பை செல்வேன். அங்கு இது எனது முதல் பயணம். பப்புவா நியூ கினியாவிற்கு பாரதப் பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறை. பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மாராபேவுடன் இணைந்து பாரத பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் மூன்றாவது உச்சிமாநாட்டிற்கு மே 22, 2023 அன்று தலைமை வகிப்பேன். முக்கியத்துவம் வாய்ந்த இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்கான அழைப்பை 14 பசிபிக் தீவு நாடுகள் ஏற்றுக் கொண்டதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 2014ம் ஆண்டு எனது ஃபிஜி பயணத்தின் போது இந்த மன்றம் உருவாக்கப்பட்டது. பருவநிலை மாற்றம், நிலையான வளர்ச்சி, திறன் கட்டமைப்பு மற்றும் பயிற்சி, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு போன்ற நம்மை ஒருங்கிணைக்கும் விஷயங்கள் குறித்து பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்களுடன் உரையாட ஆவலோடு இருக்கிறேன். இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்களுடனும் கலந்துரையாடுவேன்.

அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா பிரதமர் அல்பனீசின் அழைப்பை ஏற்று அந்நாட்டின் சிட்னி நகருக்குச் செல்லவிருக்கிறேன். இந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற நமது முதல் பாரத ஆஸ்திரேலிய வருடாந்திர உச்சிமாநாட்டின் முக்கிய முடிவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கும், நமது இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்வதற்கும் இந்தப் பயணம் வாய்ப்பாக இருக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தையை மிகவும் எதிர்பார்க்கிறேன். ஆஸ்திரேலிய நாட்டின் தொழில்துறை தலைவர்களுடனும், சிட்னியில் உள்ள பாரத சமூகத்தினருடனும் கலந்துரையாடுவேன்” என தெரிவித்துள்ளார்.