நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து

18வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் 22 பேர் கொண்ட பாரத தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றுள்ளது. இதில், ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிச்சுற்று போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது 4வது வீச்சில் ஈட்டியை 88.13 மீட்டர் தூரத்திற்கு வீசினார். இதன் மூலம் நீரஜ் சோப்ரா 2வது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். உலக தடகள போட்டியில் 19 ஆண்டுகளுக்கு பின் பாரதம் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை. வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. நீரஜ் சோப்ராவை வாழ்த்தி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “எங்கள் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவரால் ஒரு பெரிய சாதனை! உலக சாம்பியன்ஷிப்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு எனது வாழ்த்துகள். பாரத விளையாட்டிற்கு இந்த வெற்றி ஒரு சிறந்த தருணம்; நீரஜ் சோப்ராவின் எதிர்கால சாதனைகளுக்கும் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.