பிரவீன் நெட்டார் கொலை வழக்கு

பா.ஜ.க பிரமுகரான பிரவீன் நெட்டார், கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி, தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே சில முஸ்லிம் பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் மாநில அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்தது. இக்கொலையில் சம்பந்தப்பட்ட முஸ்லிம் அடிப்படைவாதிகள் சிலரை கைது செய்தது. இந்த கொலை வழக்கில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததையடுத்து வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி மேலும் சிலரை கைது செய்தனர். தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள சந்தேகத்திற்குரிய முஸ்லிம் அமைப்பு பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். பிரவீன் நெட்டார் கொலையில் சம்பந்தப்பட்ட தலைமறைவாக இருக்கும் பயங்கரவாதிகளை பற்றி துப்பு கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்தனர். இந்நிலையில் பிரவீன் நெட்டார் கொலையில் தொடர்புடைய மேலும் ஒருவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தற்போது கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் பெல்லாரே பகுதியை சேர்ந்த ஷாஹீத் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இதுவரை இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.