வாட்ஸ்அப்பில் மின் தடை புகார்

மின் வாரியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ‘மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொரோனா சிகிச்சை மையங்கள், ஆக்சிஜன் தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு மின் வாரியம் சிறப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும். தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மண்டலம், மாவட்ட மேற்பார்வை பொறியாளர்கள் மேற்கொள்ள வேண்டும். ஊரடங்கின் போது அனைத்து நகர் மற்றும் புறநகர் பகுதிகள், மலைவாழ் மக்கள் உள்ள பகுதிகளில் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து மின் தடை தொடர்பாக பெறப்படும் புகார்களை உடனுக்குடன் சரிசெய்வதற்கு அனைத்து கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். மக்கள், மின் தடை புகார்களை 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அல்லது புகைப்படத்துடன் கூடிய தகவல் தெரிவிப்பதற்காக 94458 50811 என்ற வாட்ஸ்அப் எண்ணில் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். இந்த எண்கள் பயன்பாட்டில் இருப்பதையும் மின் தடை தொடர்பான விபரங்களை உரிய பதிவேடுகளில் முறையாக பதிவு செய்வதையும் உறுதி செய்திட வேண்டும்.’ என கூறப்பட்டுள்ளது.