பிரிப்பவர்களுடன் சேர்ந்து யாத்திரை

கோவையில் இந்திய சார்ட்டட் அக்கவுண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “ராகுல் காந்தியின் நடைபயணம் என்பது மக்களுக்கான பொழுதுபோக்கு விஷயமாக அது இருந்துவருகிறது.ஓடுகிறார், ஒடியாடுகிறார். இரண்டு காங்கிரஸ் கட்சிக்காரர்கள் சண்டைப் போட்டுக் கொண்டால், இடப்பக்கம் ஒருவரையும் வலப்பக்கம் ஒருவரையும் நிறுத்தி வைத்துக் கொள்கிறார். இப்படி ஸ்டண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார்.அந்த நடைபயணத்தால் தேர்தல்களில் என்ன முடிவு வருகிறது என்பதை நாம் பார்க்கிறோம். பாரத் ஜோடோ யாத்திரை என்று கூறுகிறார். ஆனால், அது பாரத் தோடோ யாத்திரையில் நாட்டை பிரிக்கக் கூடியவர்களை மட்டும் உடன் வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்.ராகுலின் நடைபயணம், கடுமையாக நடந்து ஓடினாலும்கூட அவருக்கு நல்ல ஓர் உடற்பயிற்சியாக அமைந்திருக்கிறது. உடன் சென்ற காங்கிரஸ்காரர்களும் ஃபிட்டாகியுள்ளனர். இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை” என்று கூறினார்.