ராகுலின் மனதில் பெகாசஸ்

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உரையாற்றியபோது, பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி என்னையும் மத்திய அரசு வேவு பார்த்தது. பெகாசஸ் உளவு செயலி குறித்து உளவுத்துறை அதிகாரிகள் என்னை எச்சரித்தனர். அரசியல் கட்சித் தலைவர்கள் பலரது செல்போன்களில் பெகாசஸ் ஓட்டுக்கேட்பு மென்பொருள் உள்ளது. போனில் கவனமாக பேசுங்கள்” என கூறினார். இந்நிலையில், பெகாசஸ் மென்பொருள் குறித்த ராகுல் காந்தியின் பேச்சுக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌஹான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அவர், “பெகாசஸ் உளவு மென்பொருள், ராகுலின் அலைபேசியில் இல்லை, அது அவரது மனதில் தான் இருக்கிறது. பெகாசஸ் காங்கிரசின் டி.என்.ஏவில் நுழைந்துள்ளது. நான் ராகுல் காந்தியின் அறிவுத் திறனைக் கண்டு பரிதாபப்படுகிறேன். அவர் வெளிநாடுகளுக்கு சென்று நமது தேசத்திற்கு எதிராக பேசி வருகிறார். வெளிநாடுகளில் பாரதத்தை அவமதிக்கும் விதமாக காங்கிரஸ் நடந்து கொள்வது அவர்களின் புதிய திட்டம். பாரதம் குறித்து வெளிநாடுகளுக்கு சென்று விமர்சிப்பது தேசத்துக்கு எதிரானது. இதற்காக பாரதமும் பாரத மக்களும் ராகுல் காந்தியை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என கூறினார்.