ஓ.பி.எஸ் அறிக்கை

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று கூறிய பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்த தமிழகத்தில் தேசியத்திற்கு எதிரான செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்க்கும்போது தமிழகம் திசைமாறி செல்கிறதோ என்ற எண்ணம் பொதுமக்களிடையே மேலோங்கி நிற்பதாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்ததிலிருந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. இதற்கான காரணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையிலேயே அளித்திருப்பது விசித்திரமாக இருக்கிறது. அதிலே சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை. ஒன்றியம் என்பது தவறான சொல் அல்ல என்றும் மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது என்பதுதான் பொருள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒப்பீடு நியாயமானதாக, பொருத்தமானதாக இல்லை. பாரத நாடு பிரிக்கப்பட முடியாத ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தேசம் என்பதைத்தான் Union of States என்ற வாசகம் நமக்கு உணர்த்துகிறது. ‘ஜெய் ஹிந்த்’ என்ற சொல் குறித்து ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசியது வருத்தமளிக்கிறது. அதனை இழிவுப்படுத்தும் வகையில் தேச இறையாண்மைக்கு எதிரான அந்த வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளான பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு, நகைக்கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.