தொடரும் நீர்தேக்கத் தொட்டி சம்பவங்கள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட புதுக்கோட்டை பஞ்சாயத்து பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஜல் ஜீவன் இயக்கம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. சுமார் 60 அடி உயரம் கொண்ட இந்த நீர்தேக்க தொட்டியில் 60 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் சேமித்து வைக்கலாம். இந்த தொட்டியில் இருந்து தான் அந்த பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அதன் ஆபரேட்டர் சுத்தம் செய்ய சென்றபோது அதில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அச்சமடைந்த அவர், காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் வந்து தொட்டியின் மீது ஏறி பார்த்தபோது அதற்குள் நாய் ஒன்று இறந்து கிடந்துள்ளது. நாய் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனால், அது இறந்து பல நாட்கள் இருக்கலாம் என தெரிகிறது. பின்னர், தொட்டிக்குள் இறந்து கிடந்த நாயை அகற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொட்டியும் சுத்தம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தையடுத்து காவல்துறையினரும் வட்டார வளர்ச்சி அலுவலர்களும் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யாராவது நாயை கொன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்குள் யாரேனும் போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது நினைவு கூரத்தக்கது.