ரத யாத்திரைக்கு தயாராகும் ஒடிசா

ஒடிசாவின் ஆண்டுதோறும் நடைபெறும் பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை உலகப் புகழ்பெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் இந்த ரத யாத்திரையில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் பக்தர்கள் பங்கேற்புடன் வரும் ஜூலை 1ம் தேதி பூரி ரத யாத்திரை நடைபெறுகிறது. இதற்கு வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் இருந்து 10 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ரத யாத்திரைக்கு வரும் பக்தர்கள் முககவசம் அணிவது கட்டாயம். ரயில், பஸ் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் சுகாதார முகாம்கள் நடத்தப்படும். கொரோனா அறிகுறி உள்ளவர்கள் பூரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூரியில் கொரோனா சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது என ஒடிசா சுகாதாரத்துறை இயக்குனர் பிஜாய் மொகபத்ரா தெரிவித்துள்ளார்.