தமிழக தேசிய மாணவர் படை 39 பதக்கம் வென்று சாதனை

தமிழக தேசிய மாணவர் படையின் காலாட்படை பிரிவினர், தேசிய போட்டியில், 39 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். தேசிய மாணவர் படை இயக்குனரகத்தின், தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபார் பகுதி காலாட்படை பிரிவின் 91 மாணவர்கள், டில்லியில் செப்., 19 முதல் 30 வரை நடந்த, தேசிய காலாட்படை அணிகள், போட்டியில் பங்கேற்றன.

தமிழக தேசிய மாணவர் படையினர், அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று, 39 பதக்கங்களை வென்றனர். பெண்கள் பிரிவினர், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் போட்டியில் தங்கம்; கூடாரம் அமைத்தலில் வெள்ளி வென்று முதலிடம் பிடித்தனர்.

ஆண்கள் பிரிவினர், துப்பாக்கி சுடுதல் மற்றும் தடை தாண்டுதல் போட்டியில், இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று, இரண்டாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று, சென்னையில் உள்ள தேசிய மாணவர் படை தலைமையகத்தில், பாராட்டு விழா நடந்தது. தேசிய துணை தலைமை தளபதி கமோடர் அதுல்குமார் ரஸ்தோகி, வெற்றி பெற்றவர்களை பாராட்டி, நினைவு பரிசு வழங்கினார்.