இலவசங்கள் வேண்டாம் வளர்ச்சி திட்டங்கள் தேவை

தேர்தல் வாக்குறுதிகளில் இலவச திட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரி பாஜக மூத்த தலைவர் அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனுவில், “இது அரசின் கொள்கை சார்ந்த விவகாரம், இந்த விவகாரத்தில் கட்சிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “தேர்தல் வாக்குறுதிகளில் தேவையற்ற இலவச திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. இலவச அறிவிப்புகளுக்கு தடை விதிக்கப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம், கடந்த 4ம் தேதி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பியது. அதில், தேர்தல் வாக்குறுதிகளில் தேவையற்ற இலவச திட்டங்களை தடுக்க தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்காக, இதுகுறித்து அனைத்து கட்சிகளும் தங்கள் கருத்துகளை அக்டோபர் 19ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. பல்வேறு கட்சிகள் தங்கள் நிலைப்பாடு குறித்து தேர்தல் ஆணையத்திடம் கடிதங்களை சமர்ப்பித்துள்ளன. அவ்வகையில், பா.ஜ.க சார்பில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘வாக்காளர்களை கவரவே தேர்தல் வாக்குறுதிகளில் இலவச திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இது ஒரு ஏமாற்று வேலை. அதேநேரம் மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சித் திட்டங்கள் அவசியமானது. உதாரணமாக, மக்களின் அடிப்படை தேவையான வீட்டு வசதி திட்டங்கள், வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல் போன்ற அத்தியாவசிய திட்டங்களை அறிவிக்கலாம். ஆனால் இலவச மின்சாரம் உள்ளிட்ட தேவையற்ற இலவச வாக்குறுதிகளால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. பா.ஜ.கவை பொறுத்தவரை தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்கள் தேவையற்றது. வளர்ச்சித் திட்டங்கள் அவசியமானது’ என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. இலவச கலாச்சாரத்தால் வளர்ச்சி தடைபடும். இந்த மோசமான கலாச்சாரத்தை மக்கள் முறியடிக்க வேண்டும்” என்றார். இதற்கு, இலவச திட்டங்களையும் வாக்கு வங்கி அரசியலையும் மட்டுமே நம்பியுள்ள காங்கிரஸ், தி.மு.க, ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.