கோயில்களில் நாத்திக அரசியல் வேண்டாம்

நெல்லை, பாளையங்கோட்டையில் நடைபெறும் ‘தமிழில் குடமுழுக்கு’ சர்ச்சை விஷயத்தில், அவரவர் கருத்துகளை எழுத்து வடிவில் கொடுக்கலாம், ஒருவர் பேசியதே போதும் என்று சொல்லப்பட்டது. இதனையடுத்து, மூத்த பத்திரிகையாளரான செங்கோட்டை ஸ்ரீராம், தனது கருத்தை எழுத்து வடிவில் அளித்தார். அதில், தனது பல்வேறு பத்திரிகை, தொலைக்காட்சி அனுபவங்களை பட்டியலிட்டுள்ளார். மேலும், “நான் தமிழகத்தில் பயணம் செய்து எழுதியுள்ள, பதிவு செய்துள்ள கோயில்கள் அனைத்துமே, ஏதோ ஒரு வேத ஆகமத்தின் அடிப்படையில் அமைந்தவையே! எங்குமே தமிழ் ஆகமம் என்ற ஒன்றையோ, அதன் அடிப்படையில் இந்தக் கோயில் அமைந்திருக்கிருறது என்ற சொல்லையோ நான் கேட்டதில்லை. சைவ, வைணவ ஆலயங்களில், கோயில்களின் அமைப்பு, சந்நிதிகளின் அமைப்பு, பூஜைகள் நடைபெறும் விதம், குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) மற்றும் புனித நன்னீர்த் தெளிப்பு (சம்ப்ரோக்ஷணம்) வைபவம் ஆகியவை குறித்து தெளிவாக, இன்னின்ன செய்ய வேண்டும் என்று முன்னோர் வகுத்து, எழுதியுள்ளனர். இவற்றில் சைவாகமம் இறைவன் சிவனே கொடுத்தது என்றும், வைகானச ஆகமம் விஷ்ணுவின் அம்சமான விகனசாச்சாரியார் அளித்தது என்றும், பாஞ்சராத்ர ஆகமம் ஐந்து இரவுகளில் முனிவர்க்கு விஷ்ணுவே அளித்தது என்றும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

நம்பிக்கையின் அடிப்படையில் முன்னோர் வழிவழியாகக் கடைப்பிடித்து வந்த மரபிலும், காதுகளில் கேட்டு வாய் மூலம் தகுந்த அனுஷ்டானங்களுடன் குரு சீட உறவு முறையில் உச்சரித்து உருப்போட்டு வந்த வேத மந்திரங்கள் அடிப்படையிலும்  கோயில்களின் பூஜை நடைமுறைகள் அமைகின்றன. அவ்வாறே குடமுழுக்கு வைபவங்களில் யாக குண்டங்கள் அமைப்பது, எந்த தேவதைகளை எவ்வாறு அழைத்து திருப்தி செய்து கோயிலில் சாந்நித்யம் ஏற்படுத்துவது போன்றவைகளை ஆண்டாண்டு காலமாக தவம் செய்து இயற்கை சக்தியை தங்களுள் உள்வாங்கிக் கொண்ட ரிஷிகளும் முனிவர்களும் அமைத்துத் தந்து வழிகாட்டியுள்ளார்கள். எனவே இந்த மரபுகளை மீறி புதிதாக நடைமுறைகளை உருவாக்க இந்தக் காலத்தினராம நாம் எவரும் தவசீலரோ, அல்லது நெறியுடையோரோ, ஆன்மிக அறிவாளிகளோ அல்லர் என்பதால், அரசுத் துறையின் இந்த ‘தமிழாக்க’ முயற்சியை நிறுத்திக் கொண்டு, ஆக்கபூர்வமான வேறு தமிழ்ப் பணிகளில் கவனம் செலுத்தலாம்.

பக்தர்களுக்கு புரிய வேண்டும் என்ற மொழியில் நடத்தப்பட வேண்டும் என்றால், இப்போது கும்பாபிஷேகம், மற்றும் பூஜைகளின் போது எதற்காக இதைச் செய்கிறோம் என்ற தமிழ் மொழி விளக்கத்தை பக்தர்களுக்குப் புரியும் வகையில் சிவாசாரியார்களோ, பட்டாச்சாரியார்களோ ஒலிபெருக்கி மூலம் குடமுழுக்கு வைபவங்களில் கட்டாயம் சொல்ல வேண்டும் என்று விதிக்கலாம். கிரியைகள் மாறுதலுக்கு உட்பட்டது அல்ல. காலங்காலமாகக் கேட்டு உச்சரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ள மந்திரங்களை நாம் எந்த மொழியிலும் மொழிபெயர்க்க முடியாது. இந்த நாட்டில் வேறு எந்த மொழியிலும் இவ்வாறு குடமுழுக்கு வைபவங்களை அவரவர் மொழியில் மொழிபெயர்க்குமாறு யாரும் கோரவில்லை. அது இயலாது என்பதால்..!

நோய்க்கு மருந்து நாடி மருத்துவரிடம் செல்பவன், பரிந்துரைக்கும் மருந்தை நம்பிக்கையின் படி பெற்று உண்பானே தவிர, மருந்தின் மூலக்கூறுகளை தனக்குப் புரியும் மொழியில் அக்குவேறு ஆணிவேறாக மருத்துவர் சொல்லி, அதில் தனக்கு நம்பிக்கை வந்தால் மட்டுமே உண்பேன் என்று அடம்பிடிக்க மாட்டான். எனவே ஆட்சியாளரின் ‘நாத்திக’ அரசியல் நடைமுறைப்படுத்தலை, ‘ஆத்திக’ பக்தர்களின் பேரைச் சொல்லி செயலாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.