என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில், பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட, இலங்கையை சேர்ந்த 67 பேர் உட்பட கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலர், தங்களது தண்டனை காலம் முடிந்தும் விடுவிக்கப்படவில்லை என கூறி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தனர். இதனையடுத்து கடந்த 2ம் தேதி 16 பேர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் முகாம் சிறையில் நேற்று தேசிய பாதுகாப்பு அமைப்பான என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் மண்ணடி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட் ஆகிய இரண்டு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.