என்.ஐ.ஏ சோதனை

கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23ம் தேதி, கார் குண்டுவெடிப்பு முயற்சியை அடுத்து, இதில் உயிரிழந்த பயங்கரவாதி ஜமேஷா முபினின் கூட்டாளிகளான முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் போன்றோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் (‘உபா’) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், சந்தேகப்படும் நபர்கள், தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள், தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ அமைப்பினர் என பலர் இவ்வழக்கு சம்பந்தமாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வகையில், நேற்று அதிகாலை 4.20 மணி முதல் கோவை, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.தமிழகத்தில் என்.ஐ.ஏ இதுவரை ஒரே நேரத்தில் நடத்திய சோதனைகளில் இதுவே மிகப்பெரியதாக கருதப்படுகிறது.