புதிய கட்சித் துவக்கம்

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத், சமீபத்தில் காங்கிரசில் இருந்து வெளியேறினார், தனிக் கட்சி துவக்கப் போவதாக அறிவித்திருந்தார். அவ்வகையில், தனது புதிய கட்சி குறித்தான அறிவிப்பை குலாம் நபி ஆசாத் நேற்று வெளியிட்டார். தனது கட்சிக்கு ‘ஜனநாயக ஆசாத் கட்சி’ எனப் பெயரிட்டுள்ள அவர், மஞ்சள், வெள்ளை, நீலம் ஆகிய நிறங்களுடன் கூடிய தனது கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். “புதிய கட்சிக்காக உருது, சமஸ்கிருதத்தில் இருந்து சுமார் 1,500 பெயர்கள் அனுப்பியிருந்தனர். ஹிந்தி, உருது கலவையான ‘ஹிந்துஸ்தானி’ பெயரை வைக்க முடிவு செய்தோம். கட்சி பெயர் ஜனநாயகமாகவும், அமைதியாகவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக ‘ஜனநாயக ஆசாத் கட்சி’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கட்சி கொடியில் உள்ள மஞ்சள் நிறம், படைப்பாற்றல், வேற்றுமையில் ஒற்றுமையை குறிக்கும். வெள்ளை நிறம் அமைதியை குறிக்கும். நீல நிறம், சுதந்திரம், வெளிப்படை, கற்பனை மற்றும் கடலின் ஆழத்திலிருந்து வானத்தின் வரம்புகளைக் குறிக்கிறது” என கூறினார்.