மர்ம நபர்கள் கைவரிசை

தமிழகம் உட்பட நாடு முழுவதும் பி.எப்.ஐ, எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் சம்பந்தப்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்ற அதே நாளில் கோவையில் பா.ஜ.க அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி குமரன் நகரில், பா.ஜ.க மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கார் மற்றும் ஆட்டோக்களை சில மர்ம நபர்கள் அடித்து உடைத்துள்ளனர். பா.ஜ.க அமைப்பு சாரா பிரிவு மாவட்ட செயலாளர் பொன்ராஜ் என்பவரின் கார், குமரன் நகரை சேர்ந்த இந்து முன்னணியை சேர்ந்த சரவணக்குமாரின் இரண்டு ஆட்டோக்களை கோடாரியால் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மற்றொரு பா.ஜ.க உறுப்பினர் சிவக்குமார் என்பவரின் காரும் மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். கார் மீது டீசல் பாக்கெட்டுகளை வீசி தீ வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த பா.ஜ.க நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.