மஷால் பேரணி

கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவில் படுகொலை செய்யப்பட்ட பஜ்ரங் தள் உறுப்பினர் ஹர்ஷாவின் நினைவாக விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் ஹைதராபாத்தில் ‘மஷால் பேரணி’ நடத்தினர்.  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI)  உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும், குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கைகள் பேரணியில் எழுப்பப்பட்டன. இதுகுறித்து பேட்டியளித்த அம்மாநில வி.ஹெச்.பி தலைவர்கள், ‘நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்று ஜிஹாதிகளுக்கு எச்சரிக்கை விடுகிறோம். மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம். குற்றவாளிகளை தூக்கில் போடும் வரை போராட்டம் ஓயாது.  கேரளாவில் இருந்து பி.எப்.ஐ’யுடன் தொடர்புடைய பலர் கர்நாடகாவுக்கு வந்துள்ளனர். இரண்டு மாதங்களில் 20க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பூஜாரி ஒருவரும் ஒரு பெண் தொண்டரும்கூட கொல்லப்பட்டுள்ளனர். இந்த பயங்கரவாத அமைப்புகளை  தடை செய்ய வேண்டும். இந்த தாக்குதல்கள் எங்களுக்கு புதியது அல்ல. ராணுவம் நாட்டிற்காக எல்லையில் போராடுவதைப்போல, நாட்டிற்குள் நமது நாட்டிற்காகவும் மதத்திற்காகவும் நாங்கள் போராடுகிறோம்” என்று கூறினர். இதற்கிடையே, ஹர்ஷா கொலை வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 12 பேரை விசாரித்து வருவதாக ஷிவமொக்கா காவல் கண்காணிப்பாளர் பி.எம்.லட்சுமி பிரசாத் தெரிவித்தார்.