மதுக்கடைகள் காங்கிரசுக்கு உடன்பாடில்லை

காங்கிரஸ் மூத்த நிர்வாகயும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர், ‘மது அருந்தும் பழக்கம் இருக்கும் வரையில் டாஸ்மாக் கடைகள் இருக்கும். மதுக்கடைகளை மூடினால், கள்ளச்சாராயம் பெருகும். இதனை யாராலும் மறுக்க முடியாது. இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு வேறு வழிகள் தெரியவில்லை. மதுக்கடைகளை திறப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடில்லை. மதுபழக்கம் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என பணத்தை செலவழித்து தமிழக அரசு பிரச்சாரம் செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் அறிவுரை வழங்க வேண்டும். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் முதலில் மதுக்கடைகளை மூடட்டும். பிறகு தமிழகத்தில் மதுக்கடைகளை மூடலாம்’ எனக் கூறினார்.