முன்னாள் எம்.எல்.ஏவுக்கு ஆயுள் தண்டனை

கடந்த 2005ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் சட்டமன்ற உறுப்பினர் ராஜு பால், சில மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பிரபல தாதாவுமான அத்திக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்த வழக்கறிஞர் உமேஷ் பால், கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி கடத்தப்பட்டு கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாகவும் அத்திக் அகமது உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி 24ம் தேதி வழக்கறிஞர் உமேஷ் பால், நடுவீதியில் அத்திக் அகமதுவின் கூலிப்படையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கிலும் அத்திக் அகமது முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். 17 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கை விசாரித்து வந்த உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் உள்ள சிறப்பு நீதிமன்றம், இதில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக, குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அத்திக்  அகமது பலத்த பாதுகாப்புடன் பிரயாக்ராஜ் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழங்கப்பட்ட தீர்ப்பின்படி முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமது, அவரது கூட்டாளிகள் கான் சவுலத், தினேஷ் பாசி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் தலா ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் அத்திக் அகமதுவின் தம்பி காலித் அசிம் உட்பட 7 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ள தாதா அத்திக் அகமது மீது 101 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த சூழலில், முதல்முறையாக ஆள்கடத்தில் வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.