ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லட்டும்

நாமக்கல்லில் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ், ஊர்வலத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தும் அதனை தி.மு.க அரசு தடை விதித்தது சட்டத்தை மீறிய செயல். முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும், பா.ஜ.கவின் கொள்கைகளை ஏற்று உறுப்பினராக இணைந்து வருகின்றனர். தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவி வருவதாக கூறப்படுகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே, வெடிகுண்டு கலாசாரம் பரவுவது வாடிக்கைதான். ஓட்டு வங்கிக்காக ஆன்மிக அரசியல் பேசும் முதல்வர் ஸ்டாலின், முதலில் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி, பொங்கல் போன்ற ஹிந்து பண்டிகைகளின்போது தமிழக மக்களுக்கு வாழ்த்து கூறட்டும், ஹிந்து மதத்தைப் பற்றி அவதுாறாக பேசிய அவரது கட்சியைச் சேர்ந்த ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கட்டும். வரும், 2024ல் மக்களவைத் தேர்தல் நடக்கிறது. அப்போது, தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடந்தால், நான் பொறுப்பல்ல என்று, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏற்கனவே கூறியுள்ளார். இது உறுதியாகிவிட்டது. தேர்தல் முடிந்தவுடன், மூன்றாவது முறையாக பிரதமராக மோடியும், தமிழக முதல்வராக முதன்முறையாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் பதவியேற்பதும் உறுதி” என கூறினார்.