லியோனியை நீக்க வேண்டும்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்தத் தலைவர் ஹெச். ராஜா, “ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி பேசி வரும் லியோனியை தமிழ்நாடு பாடநுால் நிறுவன பொறுப்பிலிருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும். தி.மு.க., அரசு தீய சக்திகளை அரசு பொறுப்பில் நியமித்து அவர்கள் மூலமாக ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி வருவது கண்டிக்கத்தக்கது. லியோனி போன்றவர்களை பதவியிலிருந்து நீக்க வேண்டும். இதை செய்தால்தான் முதல்வர் நாகரீகமானவர் என மக்கள் கருதுவார்கள். இல்லையென்றால், அவர் சொல்லித்தான் இதெல்லாம் நடப்பதாக மக்கள் நினைப்பார்கள். தி.மு.க., ஹிந்து விரோத கட்சி மட்டுமல்ல தேசவிரோத கட்சியும் கூட. ஹிந்து முன்னணி நிர்வாகி கனல்கண்ணனை கைது செய்த தமிழக அரசு, நடராஜ பெருமானை அவதூறாக பேசிய யூடியூப் புரூட்டர்ஸ் மைனர் விஜயை ஏன் கைது செய்யவில்லை? ஆளுங்கட்சி எடுபிடியாக காவல் துறை செயல்படுகிறது. ஹிந்து மதத்தை இழிவுபடுத்துபவரை காவல்துறை கைது செய்வதில்லை. இதில் உள்நோக்கம் இருக்கிறதா என விசாரிக்க வேண்டும். வெளிநாட்டில் இரண்டு கம்பெனிகளை காலி செய்து விட்டு இங்கு வந்தவர் தான் தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன். தற்போது, தமிழகத்தை திவாலாக்க முடிவு செய்து 15 மாதங்களில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மின் துறையில் கணக்கீடுக்கு ஒப்பந்த தொழிலாளர்களை நியமித்துள்ளனர். கால்நடைகளுக்கான தீவனங்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் விவசாயிகளின் விரோதியாக தி.மு.க., அரசு செயல்படுகிறது” என்றார்.