நில அளவீடு துவக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமாக கீழூர், பூண்டி, காட்டூர், பஞ்சம்திருத்தி, செங்காடு, எடையான்குப்பம், தண்டலம் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் சென்னையில் உள்ள 612 ஏக்கர் நிலங்கள், மாமல்லபுரத்தில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமாக, கிழக்கு கடற்கரை சாலையையொட்டி உள்ள 1,550 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், நிலங்களை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனையடுத்து, நிலங்களை அளவீடு செய்து, 2 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020 செப்டம்பர் 29ல் உத்தரவிட்டது. கரோனா தொற்று போன்ற காரணங்களால் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், நிலங்களை அளவீடு செய்யும் பணிகளை வருவாய்த் துறையினர் தொடங்கியுள்ளனர்.