கர்நாடக ஆட்டோ வெடிப்பு பயங்கரவாத செயல்தான்

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று முன்தினம் ஆட்டோ ஒன்றில் நடந்த வெடிவிபத்து தற்செயலானது அல்ல அது பயங்கரவாதச் செயல் என்று கர்நாடக டி.ஜி.பி பிரவீன் சூட் தெரிவித்துள்ளார். சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து காவல்துறையினர் பேட்டரிகளுடன் கூடிய பிரெஷர் குக்கர் ஒன்றை மீட்டுள்ளனர். அந்த ஆட்டோவில் பயணம் செய்த ஓட்டுநரும், பயணியும் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். இந்த சம்பவம் ஒரு கட்டுமான பணியிடத்தின் அருகே நடந்துள்ளது. சம்பவ இடத்தில் கிடைத்துள்ள சிசிடிவி காட்சிகளில் ஆட்டோ திடீரென தீப்பற்றுவதும் பின்னர் அது வெடிப்பதும் பதிவாகியுள்ளது. இது குறித்து கர்நாடகா டி.ஜி.பி தனது டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், “உறுதியாகிவிட்டது. நடந்தது விபத்து அல்ல. அது பயங்கரவாத செயல். பலத்த சேதம் விளைவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டுள்ளது. கர்நாடக காவல்துறையினர் மத்திய விசாரணை அமைப்புகளுடன் இணைந்து இதனை விசாரித்து வருகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார். மாநில காவல் ஆணையர் என். சசிகுமார், “தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள ஆட்டோ ஓட்டுநர், தான் முதலில் பிரெஷர் குக்கரில் இருந்து தீ பிடிப்பதைப் பார்த்ததாகக் கூறியுள்ளார். மக்கள் பதற்றப்பட வேண்டாம். வதந்திகளைப் பரப்ப வேண்டாம். கூடுதல் தகவல் கிடைத்த பின்னர் பகிர்கிறோம்” என்றார். இந்த சம்பவத்தில், மாநில காவல்துறை விசாரணையில், மத்திய புலன் விசாரணை அமைப்புகள் உதவி வருவதாக மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.