மன்னிப்பு கேட்ட கனிமொழி

சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க பேச்சாளர் சைதை சாதிக், பா.ஜ.கவை சேர்ந்த நடிகை குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு மக்களிடம் இருந்தும் பா.ஜ.கவினரிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனிடையே, இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட குஷ்பு, “ஆண்கள் பெண்களை தவறாகப்பேசுவது, அவர்கள் வளர்க்கப்பட்ட விதத்தையும், அவர்கள் வளர்ந்த மோசமான சூழலையும் காட்டுகிறது. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். இதுபோன்ற ஆண்கள் தங்களை ‘கலைஞரை பின்பற்றுபவர்கள்’ என்று அழைத்துக் கொள்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிட மாடலா?” என்று ஸ்டாலின், கனிமொழி ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளை டேக் செய்து கேள்வி எழுப்பியிருந்தார். குஷ்புவின் இந்த டுவீட்டுக்கு பதிலளித்துள்ள கனிமொழி, “ஒரு பெண்ணாகவும் மனிதராகவும் இதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். இதை யார் செய்திருந்தாலும், சொன்ன இடம் அல்லது அவர்கள் சார்ந்த கட்சி எதுவாக இருந்தாலும் இது எக்காரணத்தைக் கொண்டும் சகித்துக்கொள்ள முடியாதது. தி.முக.வுக்கும் இது ஏற்புடையது இல்லை’ என்று மன்னிப்பு கோரினார். இந்தப் பதிவுக்கு குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.