அர்ச்சகர்கள் நியமன வழக்கில் தீர்ப்பு

தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள், பூஜாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் பணி நியமனம் மற்றும் பணி நிபந்தனைகள் தொடர்பாக ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிய பணி விதிகள் கடந்த 2020ம் ஆண்டு கொண்டு வரப்பட்டன. இந்த புதிய விதிகளை எதிர்த்து அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அர்ச்சகர்களின் பணி நியமனம், இந்த வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று கடந்த 2021 அக்டோபரில் இடைக்காலமாக உத்தரவிட்டது. அதன்பிறகு, இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் மனுதாரர்கள் தரப்பு மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை தரப்பு வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட உள்ளது.