இது மரியாதை; அது அவமானம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலில், அ.தி.மு.க., மூத்த தலைவர்கள் விழுவதை, தி.மு.க.,வினர் கிண்டல் செய்தனர். ஆட்சிக்கு வந்ததும், தி.மு.க.,வினரும் அதேபோல், அமைச்சர்கள் காலில் விழத் துவங்கி விட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக, மூன்று புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளனர். இந்த மூன்று படங்கள் குறித்து, அண்ணாமலை கூறியதாவது:தி.மு.க., என்றாலே சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று தான். பகுத்தறிவு, சமூக நீதி, சமத்துவம் என்ற வார்த்தைகளுக்கும், அவர்களுக்கும் சம்பந்தமே கிடையாது. ஆனால், இதை வைத்து வியாபாரம் செய்வர். அப்படித் தான், சமத்துவத்தை மையமாக வைத்து, மாமன்னன் கதையை பின்னி, அதில் கோடிகளை அள்ளி இருக்கின்றனர். தங்களின் உண்மை நிலையை படம் எடுத்து காட்டி விட்டதாக கூறி, ஓட்டுக்களை பெற நடக்கும் பட நாடகத்தை, தாழ்த்தப்பட்ட மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்.

உண்மையில் தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக அந்தஸ்து குறித்த அக்கறை இருக்குமானால், முதலில் தலித்களுக்கு சொந்தமான, பஞ்சமி நிலத்தை, ‘முரசொலி’க்காக அபகரித்து வைத்திருப்பதை திருப்பி கொடுக்க வேண்டும். அதை விடுத்து, அவர்கள் என்ன தான் சமூக நீதி, சமத்துவம் பேசினாலும் அது பொய். ஓமந்துார் ஸ்ரீராம் பள்ளி நிர்வாகியும், பா.ஜ., உறுப்பினருமான ஹரிகிருஷ்ணன், தான் நடத்தி வரும் ஸ்ரீராம் அறக்கட்டளை சார்பில், 39 ஜோடிகளுக்கு, கடந்த 5ம் தேதி திருமணம் செய்து வைத்தார். திண்டிவனம் காஞ்சி மகா பெரியவா திடலில், வேத விற்பன்னர்கள் முன்னிலையில், திருமண விழா நடந்தது. அதில் வேதம் படித்த பண்டிதர்கள் மற்றும் வேதம் படிக்கும் சிறுவர்கள் பங்கேற்றனர்.திருமண விழா முடிந்ததும், அவர்களை ஒருங்கிணைத்து, காலில் விழுந்து வணங்கினேன். இது தான் வேதம் படித்த பெரியவர்களுக்கு செலுத்தும் உண்மையான மரியாதை. அதாவது இது மரியாதை; அது அவமானம். இவ்வாறு அவர் கூறினார்.