மதமாற்றத்துக்கு முதல்வரே ஊக்கமளிப்பது சரியல்ல

தமிழகத்தில் நடக்கும் மதமாற்றத்துக்கு தமிழக முதல்வர் ஊக்கமளிப்பது போல செயல்படுவது சரியல்ல என்று விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) அமைப்பின் அகில உலக பொதுச் செயலர் மிலிந்த் பராண்டே தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் 72 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அமைப்பின் சார்பில் 7,500 திட்டங்கள் உலக அளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பட்டியல் சமூகத்தினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் இத்திட்டங்களால் பயனடைந்து வருகின்றனர். நாட்டில் 150 இடங்களில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சிறப்புப் பயிற்சிகள் நடந்து வருகின்றன. தேசிய உணர்வு, சுகாதாரம், உடல் பயிற்சி ஆகியவற்றை மையமாக வைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 15ம் நாள் மகர சங்கராந்தி அன்று அயோத்தியில் ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அதில் நாடெங்கிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். நமது நாட்டில் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் மதமாற்றம் தீவிரமாக நடந்து வருகிறது. கிறிஸ்தவ, முஸ்லிம் அமைப்புகள் மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் மதமாற்றம் அதிகளவில் நடந்து வருகிறது. அதற்கு முதல்வர் ஊக்கமளிப்பது போல செயல்படுவது சரியல்ல. மத்திய அரசு மதமாற்றத்தை தடுக்க பல நடவடிக்கை மேற்கொண்டாலும், மாநில அரசுகள் மனது வைத்தால்தான் இத்தகைய மதமாற்றத்தை தடுக்க முடியும். விஷ்வ ஹிந்து பரிஷத் என்பது அரசியல் கட்சி அல்ல. ஆனால், கர்நாடகத் தேர்தலில் மக்கள் தேசப் பாதுகாப்புணர்வுடன் வாக்களித்திருக்க வேண்டும் என அது கருதுகிறது. தற்போது அங்கு முஸ்லிம்கள் சார்பில் துணை முதல்வர், 4 முக்கிய துறை அமைச்சர்களுக்கு கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, தேசிய உணர்வோடு மக்கள் வாக்களிப்பது அவசியம்” என கூறினார்.