இதுதான் திராவிட மாடலா?

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, “திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி. திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது” என கூறினார். தி.மு.கவின் அடிமடியிலேயே கைவைத்த ஆளுநரின் இந்த கருத்து, தி.மு.கவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தி.மு.க கட்சியினரும் அக்கட்சியின் துதிபாடிகளும் இதனை கடுமையாக கண்டித்து வருகின்றனர். இந்த சூழலில், தமிழக ஆளுநர் தெரிவித்த கருத்திற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய முதல்வர் ஸ்டாலின், “திராவிட மாடலே இனி அனைத்து மாநில ஆட்சி நிர்வாக பார்முலாவாக இருக்கும்” என கூறியுள்ளார். ‘விடியல் வரும் என நம்பி இவர்களுக்கு ஓட்டு போட்டதால் இப்போது தமிழகம் விடியாமலே போய்விட்டது, விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது, போதை மருந்து, கொலை, கொள்ளை போன்றவை பெருகிவிட்டன, இவர்கள் ஆட்சியில், கடந்த 2 வருடங்களில் 1,900த்துக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது, தி.மு.கவினரின் அராஜகங்கள் எல்லை மீறி சென்றுகொண்டுள்ளன, மின்சாரம், வீட்டு வரி என எல்லாம் உயர்த்தப்பட்டு விட்டன, ஹிமாலய சொத்துப் பட்டியலும் ஊழல் பட்டியலும் வெளியாகி பயமுறுத்தி வருகின்றன. இந்த மாடல் தான் திராவிட மாடலா? இது தான் ஒட்டு மொத்த நாட்டுக்கும் நிர்வாக ஃபார்முலாவா?’ என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.